Thursday, June 4, 2015

சைவம் சிறப்புக்கட்டுரை


இணையத்தளம் ஒன்றில் நான் வாசித்த கட்டுரை எனக்குள் ஏற்படுத்திய அருட்டுணர்வு (inspiration) காரணமாக நான் இந்தக் கட்டுரையை எழுதியிருக்கின்றேன். இதன் முற்பகுதியில் நான் வாசித்த
கட்டுரையை பிரதி பண்ணியிருக்கின்றேன். பிற்பகுதியில் எனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டிருக்கின்றேன். இந்த இரண்டு பகுதியையும் பாவிக்கப்பட்ட தமிழ்நடையை வைத்து வாசகர்கள் வேறுபிரித்து அறிந்து கொள்வார்கள் என நம்புகின்றேன்.
கோயிலுக்கு நாம் ஏன் செல்ல வேண்டும்? (ஒரு அறிவியல் பூர்வமான அலசல்)
இதைப் படிக்க ஆரம்பிக்கும் முன் இது எல்லா ஃபாஸ்ட்ஃபுட் கோயில்களுக்கும் பொருந்தாது என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
எல்லா லட்சணங்களையும் கொண்டிருக்கும் கோயில்களுக்கு மட்டும் தான் இது.
பழங்காலத்து கோயில்களில் எல்லாம் இது 100 சதவிகிதம் உள்ளது.
பூமியின் காந்த அலைகள் அதிகம் வீசப்படும் இடங்கள்தான் இந்த கோயில்களின் சரியான அமைவிடமாகும். இது பொதுவாக ஊருக்கு ஒதுக்குபுறமான இடங்கள் மலை ஸ்தலங்கள் மற்றும் ஆழ்ந்த இடங்கள் தான் இதுனுடைய அடையாளமாகும். கோயில்களில் ஒரு அபரிதமான காந்த சக்தியும், மனிதர்களுக்கு நேரிடையாக வழங்கக் கூடிய நல்ல சக்தியையும் அதிகம் கொண்டிருக்கும். இது வடதுருவத்தில் இருந்து தென்துருவத்தை நோக்கி வீசும் அலைகளின் சக்தி போல இருக்கும் முக்கிய சிலைதான் இந்த மையப்பகுதியில் வீற்றிருக்கும். அதை நாம் கர்ப்பகிரகம் அல்லது மூலஸ்தானம் என கூறுவோம். இந்த மூலஸ்தானம் இருக்கும் இடம் தான் அந்த சுற்று வட்டாரத்திலேயே அதிகம் காணப்படும் அந்த காந்த மற்றும் நேரிடியான சக்திகளின் மையமாக இருக்கும் . பொதுவாக இந்த மூலஸ்தானம் சுயம்பாக உருவாகும் அல்லது அங்கே கிடைக்க பெறும் சிலைகள் அல்லது நேர்மறையான அறிகுறிகளைக் கொண்டு உருவாகும். அப்புறம் தான் கோயில் உருவாகும்.
நிறைய கோயில்களின் கீழே அதுவும் இந்த கர்ப்பகிரகத்தின் கீழே சில செப்பு தகடுகள் பதிக்கபட்டிருக்கும் அது எதற்கு தெரியுமா? அது தான் கீழே இருக்கும் சக்தியை பன்மடங்காக்கி வெளிக் கொணரும். அதுபோக எல்லா மூலஸ்தானமும் மூன்று பக்கங்களும் மூடி வாசல் மட்டும் தான் திறந்து இருக்கும் அளவுக்கு கதவுகள் இருக்கும். இது அந்த சக்தியை சிதறவிடாமல் ஒரு வழியாக அதுவும் வாசலில் இடது மற்றும் வலது புறத்தில் இருந்து இறைவனை வணங்கும் ஆட்களுக்கு இந்த சக்தி கிடைக்க வேண்டும் என்பதற்காக. இது உடனே தெரியாமல் இருக்கும் ஒரு சக்தி. தொடர்ந்து கோயிலுக்கு செல்லும் அடியார்களுக்கு அங்கு ஒரு சக்தி இருப்பது தெரியும். அது போக கோயிலின் பிரகாரத்தை இடமிருந்து வலமாய் வருவதற்கு காரணம் காரணம் சக்தியின் சுற்று பாதை இது தான் . அதனால் தான் மூலஸ்தானத்தை சுற்றும் போது அப்படியே சக்தியின் சுற்றுபாதை கூட சேர்ந்து அப்படியே எங்கள் உடம்பில் வந்து சேரும். இந்த காந்த மற்றும் ஒரு வித நேர்மறையான மின்சார சக்தி நமது உடம்புக்கும் மனதிற்கும் ஏன் மூளைக்கும் தேவையான ஒரு நேர்த்தன்மை கொண்ட இராசாயன மாற்றத்தை எங்கள் உடம்புக்கு கொடுக்கின்றது. மூலஸ்தானத்தில் ஒரு விளக்கு கண்டிப்பாய் தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும் அது போக அந்த விக்கிரகத்திற்க்கு பின் ஒரு விளக்கு (இப்போது நிறைய கோயில்களில் பல்புதான்) அதை சுற்றி கண்ணாடி அது செயற்க்கை ஒளி வட்டம் வருவதற்க்கு அல்ல. அது அந்த சக்தியை அப்படியே பிரதிபலிக்கும் செய்யும் ஒரு தொழில்நுட்பம்தான்.
அது போக மந்திரம் சொல்லும் போதும் மணியடிக்கும் போதும் அங்கே செய்யபடும் அபிஷேகம் அந்த சக்தியை மென்மேலும் கூட்டி ஒரு கலவையாய் வரும் ஒரு அபரிதமான சக்தியை உருவாக்கும் தொழிறகூடம் தான் இந்த மூலஸ்தானம்.
இவ்வளவு அபிஷேகம், கர்ப்பூர எரிப்பு, தொடர் விளக்கு எரிதல் போன்றவற்றை ஒரு 10 அடி நீளமும் 10 அடி அகலமும் கொண்ட அறையில் தொடர்ந்து நீங்கள் செய்து பாருங்கள் . இரண்டே நாளில் அந்த இடம் சாக்கடை நாற்றம் எடுக்கும் ஆனால் கோயிலில் உள்ள இந்த கர்ப்பகிரகம் மற்றும் எத்தனை வருடம் பால்,தயிர்,பஞ்சாமிர்தம், தேன், சந்தனம், குங்குமம், விபூதி மற்றும் எண்ணெய், சீயக்காய் போன்ற எவ்வளவு விஷயங்களை கொன்டு அபிஷேகம் செய்தாலும் இந்த இடம் நாற்றம் என்ற விஷயம் வரவே வராது. அது போக கடைசியில் செய்யும் சொர்ணாபிஷேகம் இந்த எனர்ஜியை ஒவ்வொரு நாளும் கூட்டிகொண்டே செல்லும்.
பூக்கள்- கர்ப்பூரம் (பென்ஸாயின் கெமிக்கல்)- துளசி (புனித பேஸில்)- குங்குமப்பூ (சேஃப்ரான்)-கிராம்பு (கிளவ்) இதை சேர்த்து அங்கு காப்பர் செம்பில் வைக்கபட்டு கொடுக்கும் தீர்த்தம் ஒரு அபரித சுவை மற்றும் அதன் சுவை கோயிலில் உள்ளது போல் எங்கும் கிடைக்காது. இதை ஒரு சொட்டு அருந்தினால் கூட அதில் உள்ள மகிமை மிக அதிகம். இதை தொடர்ந்து உட்கொண்டவர்களுக்கு இது ஒரு உடலினுள் நோயை எதிர்க்க் கூடிய எதிர்ச் சக்தியை அதிகமாக உருவாக்கும் என்றால் அதிகமில்லை. இதை மூன்று தடவை கொடுக்கும் காரணம் ஒன்று உங்கள் தலையில் தெளித்து இந்த உடம்பை புண்ணியமாக்க மீதி இரண்டு சொட்டு உங்கள் உடம்பை பரிசுத்தமாக்க.
இன்று ஆயிரம் பற்பசை அமெரிக்காவில் இருந்து வந்தாலும் அடிப்படையில் கராம்பு-துளசி- வேம்பின் ஃபார்முலாவில் தயாரிக்கும் தீர்த்தம் பல ரோக நிவாரணியாக விளங்கின்றது. இந்த தீர்த்தம் வாய் நாற்றம் பல் சுத்தம் மற்றும் இரத்ததை சுத்த படுத்தும் ஒரு அபரிதமான கலவை தான் இந்த தீர்த்தம். கோயிலுக்கு முன்பெல்லாம் தினமும் சென்று வந்த இந்த மானிடர்களுக்கு எந்த வித நோயும் அண்டியது இல்லை என்பதற்கு இதுதான் காரணம்.
கோயிலின் அபிஷேகம் முடிந்து வஸ்த்திரம் சாத்தும் போது மற்றும் மஹா தீபாராதனை காட்டும் போது தான் கதவை திறக்கும் காரணம் அந்த சுயம்புக்கு செய்த அபிஷேக சக்தி எல்லாம் மொத்தமாக உருவெடுத்து அப்படியே அந்த ஜோதியுடன் ஒன்று சேர வரும் போது தான் கதவை அல்லது திரையை திறப்பார்கள் அது அப்படியே உங்களுக்கு வந்து சேரும் அது போக அந்த அபிஷேக நீரை எல்லோருக்கும் தெளிக்கும் போது உங்கள் உடம்பில் ஒரு சிலிர்ப்பு வரும் காரணம் இது தான். கோயிலுக்கு மேல் சட்டை அணிந்து வர வேண்டாம் என கூறுவதற்கும் இது தான் முக்கிய காரணம் அந்த எனர்ஜிஇ அப்படியே மார்பு கூட்டின் வழியே புகுந்து உங்கள் உடம்பில் சேரும் என்பது ஐதீகம்.
பெண்களுக்கு தாலி அணியும் காரணமும் இது தான். நிறைய பெண்களுக்கு ஆண்களை போன்று இதய நோய் வராமல் இருக்கும் காரணம் இந்த தங்க மெட்டல் இதயத்தின் வெளியே நல்ல பாஸிட்டிவ் எனர்ஜியை வாங்கி கொழுப்பை கூட கரைக்கும் சக்தி இருப்பதாக ஒரு கூடுதல் தகவல். மாங்கல்யம்- கார் சாவி மற்றும் புது நகைகள் இதையெல்லாம் இங்கு வைத்து எடுத்தால் அந்த உலோகங்கள் இதன் சக்தியை அப்படியே பற்றி கொள்ளுமாம். இது சில பேனாக்கள் மற்றும் பத்திரிகை மற்றும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். கல் சிலையின் முன் வைத்து எடுக்கும் இவர்களை என்னவென்று கூறும் அறிவாளிகள் இதன் எனர்ஜிதான் அங்கிருந்து இதில் படும் என்பது தான் இதன் பிளஸ் பாயின்ட். எவ்வளவு பேர் பல மைல் தூரத்தில் இருந்து பயணம் செய்திருப்பினும் அந்த சில நொடிகளில் தரிசனம் கிட்டும்போது அந்த உடம்பில் ஒரு மென்மையான சிலிர்ப்பும், ஒரு வித நிம்மதியும் ஒரு எனர்ஜி வந்து மிச்சம் உள்ள எவ்வளவு பெரிய பிரகாரத்தையும் சுற்றி வரும் ஒரு சக்தியை மீண்டும் உடம்பிற்கும் மனத்திற்கும் வழங்குவது (காரின் பற்றியை சார்ஜ் செய்வது போல) இந்த கோயிலின் மூலஸ்தானம் தான்.
அது போக கோயிலின் கொடி மரத்திற்க்கும் இந்த பரிகாரத்திற்க்கு ஒரு நேரடி மின்னியல் தொடர்பு உண்டென்றால் அது மிகையாகது.
கோயில் மேல் இருக்கும் கலசம் சில சமயம் இடிதாங்கியாக மாற இது தான் காரணம். கீழ் இருந்து கிளம்பும் காந்த மின்னலைகள் இடியின் தாக்கதை சமநிலைப்படுத்தும். மாடிக்கட்டடங்களுக்கு இடிதாங்கி வைத்துக் கட்டும் தொழில் நுட்பம் வளர்ந்திருக்கும் இன்றைய காலகட்டத்தில் அந்த இடிதாங்கியும் இல்லாமல் கோயில்கள் கட்டப்பட்டிருப்பதற்கு காரணம் இதுதான் காரணம். தான் ஒரு சாதாரண கலசத்தையும் இடிதாங்கியாக மாற்றும் திறன் படைத்தது. அது போக கோயில் இடி தாக்கும் அபாயம் இல்லாமல் போன காரணம் கோயில் கோபுரத்தில் உள்ள இந்த கலசங்கள் ஒரு சிறந்த மின் கடத்தி ஆகும்
அது போக கொடி மரம் இன்னொரு இடிதாங்கி மற்றும் இது தான் கோயிலின் வெளி பிரகாரத்தை காக்கும் இன்னொரு தொழில் நுட்பத்தை தன்னகத்தே கொண்டது.
அது போக கோயில் கதவு என்றுமே மரத்தில் செய்யபட்ட ஒரு விஷயம் ஏன் என்றால் எல்லா அதிகூடிய அதிர்வுகளையும் நடுவுநிலைப்படுத்தக் கூடிய சக்தி மரத்திற்கு உண்டு. இடி இறங்கினால் கோயிலின் கதவுகளில் உள்ள மணி கண்டிப்பாக அதிர்ந்து ஒருவித ஒலியை ஏற்படுத்தும் இதுவும் ஒரு இயற்கை விஷயம் தான்.
நல்ல மானிடர் இருவேளை கோயிலுக்கு சென்று வந்தால் மனிதனின் உடல் மட்டுமல்ல அவனின் மனதும் மூளையும் சுத்தமாகும். சித்த சுவாதீனம் இல்லாதவர்களை கூட கோயிலில் கட்டி போடும் விஷயம் இந்த எனர்ஜி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது தான் நியதி. கோயிலின் மடப்பள்ளியில் கிடைக்கும் புளியோதரை ஆகட்டும் சர்க்கரை பொங்கலாகட்டும் இந்த ருசியையும் எந்த ஐந்து நட்சத்திர உணவகமும் கொடுத்துவிட முடியாது என்பது தான் நியதி.
சில கோயில்களில் இரண்டு அல்லது நாலு வாசல் இருக்கும் காரணம் இந்த சக்தி அப்படியே உங்களுடன் வெளியே செல்ல வேண்டும் என்ற மூத்தோர்கள் நமக்கு வகுத்த சூத்திரம் தான் இந்த கோயில் தொழில் நுட்பம்.
மேலேயுள்ள கட்டுரையின் தொடர்ச்சியாக புலம் பெயர் நாடுகளில் கோயில்களின் அமைப்பு, தேவைகள், அவற்றின் கடப்பாடுகள் என்னவாக இருக்கின்றது என்றும் என்னவாக இருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும் என ஆராய்வாதே இந்தக் கட்டுரையின் நோக்கம் ஆகும்.
பல புலம் பெயர்ந்த நாடுகளில் நகரப்பகுதிகளின் மத்தியில் மேற் சொன்னவகையில் கோயில்களை அமைப்பதில் பல இடர்ப்பாடுகள் உண்டு.
முதலாவாதாக இந்த நாடுகளில் இந்த இந்த நகரசபை பகுதிகளில் இவ்வாறுதான் கட்டடங்கள் அமைக்கப்பட வேண்டும் என சட்டம் இயற்றப்பட்டிருக்கும். அதற்கமைவாகவே எந்தக் கட்டடமும் அமைக்கப்பட வேண்டும். எனவேதான் நகரப்பகுதிகளில் அமைக்கப்படும் கோவில்கள் பொதுவாக ஒரு மூடிய கட்டத்துள் கோயில் உள்பிரகாரம் அமையக்கூடிய வகையில் அமைக்கப்படுகின்றது.
அவ்வாறு இல்லாமல் இலங்கை இந்தியாவில் உள்ளது போல முற்று முழுதாக நகரப்பகுதியின் வெளியில் கட்டப்பட வசதிகளும் சட்டத்திலும் இடம் உண்டு. அவ்வாறான அழகிய ஆலயங்களும் ஆங்காங்கே உண்டு. ஆனால் மக்களின் போக்குவரத்து வசதிகள், நேர இடர்ப்பாடுகள், பூசகரைத் தங்க வைத்தலில் உள்ள சிரமங்கள் என்பவற்றையும் குறிப்பாக பொருளாதாரப் பிரச்சனையையும் கருத்திற் கொண்டு மூடிய மண்டபத்துள் அமைக்கப்படும் சிறிய கோயில்கள் அதிகமாக அமைக்கப்படுகின்றன.
Fastfoodkovilkal
இலங்கை இந்தியக் கோயில்களுக்குரிய செலவினங்களுடன் இங்குள்ள செலவினங்களை ஒப்பீட்டுப் பார்க்கும் பொமுது மின்சாரம், மண்டபத்தை வெப்பமாக்கல் ஆகிய இரண்டு விடயங்களும் அதிக செலவினத்தை ஏற்படுத்தும் விடயமாக இருக்கின்றது. வருடாந்த வரவு செலவினங்களைப் பார்க்கும் பொழுது இதற்கு அதிக பணம் ஒதுக்க வேண்டியுள்ளது.
இந்த செலவினங்களையும், மற்றைய செலவினங்களையும் ஈடுகட்டுவதற்கு இந்த கோயில்களுக்கு அதிக அங்கத்தவர் தொகையின் தேவையும் அதன் அடிப்படையில் வரக்கூடிய பொருளாதாரத்தையும் இந்த க் கோயில்கள் மிகவும் எதிர்பார்த்த நிலையிலேயே உள்ளது. அது மாத்ரம் இல்லாது அன்றாட, குறிப்பாக வெள்ளிக் கிழமை பூஜைகளையும் மற்றைய விசேட தினங்களை நடத்துவதற்கும் வருடாந்த உற்சவங்களை நடாத்துவதற்கும் கோயில்களின் நிர்வாகம் அடியார்களின் கைகளையே எதிர்பார்க்க வேண்டிய நிலையில் உள்ளது.
பல முஸ்லீம்நாட்டின் நாடுகளும் தலைவர்கள் மசூதிகளுக்கு வழங்கும் பண உதவிபோல அல்லது ஜெகோவா போன்றவற்றிக்கு பெரும் கிறிஸ்தவச் செல்வந்தர்கள் போல இந்து சமய வளர்ச்சிக்கு என உலக அமைப்பில் பெரும் புள்ளிகள் இல்லை என்பது கவலைக்குரியது. இந்துகளின் இராஜ்யம் ஆன இந்தியாவில் திருப்பதி போன்ற கை விரலை மடித்து எண்ணக் கூடிய சில கோயில்களைத் தவிர மற்றைய கோயில்களும் பிராமணர்களும் வறுமையில் வாடும் பொழுது அவர்களால் எப்படி பிறநாட்டு ஆலயங்களுக்கு உதவ முடியும்.
இந்த நிலையில் கோயில்கள் தனது அன்றாட இயக்கத்திற்கு பல விதங்களில் அடியார்களுடனும், ஐயர்மார்களுடனும் பல் வேறுபட்டட சமரசங்களைச் செய்து காலத்தை ஓட்ட வேண்டிய நிலையில் உள்ளன.
உதாரணமாக புலம் பெயர்ந்த நாடுகளில் தேர், தீர்த்தங்கள் என்பன சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் அமையக் கூடியவாறு திட்டமிட்டு நடாத்தப்படுகின்றன.
இதனையே எனது முதல் நூலில் எழுதியிருந்தேன்:
”எங்களின் தேர்ச் சக்கரங்கள்
சனி, ஞாயிறுகளில் மட்டுமே உருளும் ”
”வெளிநாடு வந்தால் வியாழன் வெள்ளி
எல்லாம் பார்க்க முடியாது”
”என் மகளின் நடன அரங்கேற்றத்திற்கு
நடராசர் காலைத் தூக்கியபடி
ஒரு மூலையில் நின்றால் போதும்”
”இங்கு சைவம் நெற்றியில்
மட்டுமே வாழ்கின்றது!”
இந்த வகையில் புலம் பெயர்ந்த நாடுகளில் சைவசமயத்தின் நிலை தாழ்ந்திருப்பதை எழுதியிருந்தேன்.
பொதுவாக நாம் வாழ்ந்த ஊர்களில், நகரங்களில் கோயில்களின் முன் அடியவர்கள் ஆண்டனிடம் ஒவ்வொரு சிறிய தேவைகளுக்கும் கை ஏந்தி நின்றார்கள்.
கசப்பான ஒரு உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டுமாயின் புலம் பெயர்ந்த நாடுகளின் பல கோயில்களின் முன் நாம் கையேந்திய நிலை மாறி கோயில்கள் அடியவர்களிடம் கையேந்தும் நிலைக்கு புலம் பெயர் நாடுகளின் கோயில்கள் மாறியிருக்கின்றது. இது சைவத்திறகும் எம் வளரும் சந்ததிக்கும் ஆரோக்கியமானது அல்ல.
அத்துடன் எல்லாவற்றையும் புலம்பெயர்ந்த நாட்டுநடைமுறைகளுக்கும் பொருளாதார தேவைகளுக்காகவும் மாற்றிக் கொண்டு சென்றால் இறுதியில் உண்மையான தத்துவங்களை கோயில்களில் கண்டுகொள்ள முடியாது கூகிளில்தான் கண்டு கொள்ள வேண்டும்.
மதமாற்றங்கள் நடைபெறும் பல இடங்களில் எம்மவருக்குள்ள பலவீனம் யாதெனில் எங்கள் சமயத்தைப்பற்றி அடித்துச் சொல்லி அவர்களுடன் வாதிட முடியாதிருக்கும் நிலைமைதான். மதம் மாற்ற முனைபவர்கள் அதிகமாக தங்கள் தோட்டத்தின் சிறப்பைச் சொல்லாமல் மாற்றன் தோட்டத்து குறைகளையே எடுத்துச் சொன்ன பல கையேடுகளை வாசித்திருக்கின்றேன். அவர்கள் குறை எனச் சொல்லியிருப்பது அவர்கள் ஊனக்கண்ணால் பார்த்த விடயங்களே தவிர ஞானக் கண்ணால் பார்த்த விடயங்கள் இல்லை.
இதனை எவரும் ஒரு குறிப்பிட்டு சமயத்திற்கு எதிரான பிரச்சாரமாக பார்க்க வேண்டாம்.
மதமாற்றங்கள் காலகாலமாக வெவ்வேறு தேவைகள் அல்லது நிர்ப்பந்;தங்கள் காரணமாக நிகழ்ந்துள்ளது. இந்தியாவில் அதிகளவு இந்துக்கள் முஸ்லீம்களாக மாறியதே இந்துக்களின் சாதிய அடக்கு முறை என்ற கசப்பான உண்மையை ஒத்துக் கொள்ள வேண்டும். போலியை எதிர்பது தவறில்லை. ஆனால் அதற்காக தனது அடையாளமாக உள்ள ஒன்றைத் துறக்க முதல் செல்லும் இடத்தில் தனக்கு முழு அங்கீகாரம் கிடைக்குமா என எண்ணிப் பார்க்க வேண்டும்.
காலம் சென்ற எழுPத்தாளர் டானியலின் ”கானல்” என்ற நாவலில் ஒரு குடியானவன் தனக்கு நல்ல சமூக அந்தஸ்து கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் கிறிஸ்தவ மதத்திற்கு செல்கின்றான். அங்கு தேவாலயத்தில் அவனுக்கு வாங்கில் இருக்க இடம் கிடைக்கிறது. ஆனால் கடைசி வரிசையில்.
டென்மார்க்கில் அகதிகளாக சில நாட்டுவந்த மக்கள் – குறிப்பாக பெண்கள் – தங்களுக்கு மதத்தில் உள்ள அடக்கு முறையின் தாக்கத்தில் இருந்து வெளியேற முற்று முழுதாக டெனிஷ் மக்கள் போல 80களில் நடக்க தொடங்கினார்கள்.
கோடை காலங்களில் டெனிஷ்மக்கள் சூரியக் குளியலில் ஈடுபடுவது மிகச் சாதாரணம். ஆனால் வெயில் வர முதல் டெனிஷ் மக்களையும் முந்திக் கொண்டு புற்தரை மீது இந்த இன பெண்கள் படுக்கும் அளவுக்கு முன்னோக்கி (?) பாய்ந்தார்கள். ஆனால் மிகக் கூறிய காலத்தில் டென்மார்க் மக்களும் அவர்களை ஏற்றுக் கொள்ளாமல் சொந்த இன மக்குளும் ஏற்றுக் கொள்ளாமல் போன பல துயர்நிறைந்த கதைகள் உண்டு.
எனவே தான் புலம் பெயர்நாடுகளில் அவரவர் சார்ந்த சமயங்களையும் கலாச்சார விழுமியங்களையும் அவர் அவர்கள் நன்கு வளர்க்க வேண்டுமாயின் அதனை எங்கள் அடுத்த சந்ததிக்கு கொடுக்க வேண்டும். அதற்கு கல்விக் கூடங்களும் சமய வழிபாட்டு நிறுவனங்களும் கட்டாயம் முன் வரவேண்டும். அத்துடன் அவர்கள் முன்னுதாரணமாக இருக்க வேண்டும்.
வளர்ச்சி என்பது கல்வி பொருளாதாரம் என்பதுடன் மட்டுமில்லாது ஆன்மீகத்தில் எமக்கு கிடைக்கும் ஞானமும்தான் எம்மையும் எம் சந்ததியையும் நிறைவாக வாழ வைக்கும்.
அடுத்த சந்ததியும் கோவில்களும்:
பல இடங்களில் பிள்ளைகள் கோயிலுக்கும் தங்களுக்கும் எந்தவித சம்மந்தமும் இல்லாதது போல வெளியே பந்து விளையாடிக் கொண்டும் உள்ளே ஐபட்டு விளையாடிக் கொண்டும் இருப்பார்கள். பூஜை நேரம் நெருங்கிய பொழுது மிகவும் சந்தோசமாக மணியடித்தலிலும் சங்கு ஊதுவதிலும் பங்கு பற்றுவார்கள். இது நல்ல விடயம் தான். ஆனால் அடிப்படை வைச சித்தாங்கள் தெரியாமல் பிள்ளைகள் வளரும் பொழுது இன்று புலம் பெயர்நாடுகளில் நடைபெறும் மதமாற்றங்களுக்கும் இவர்கள் போய் சிக்குவதற்று அதிக நேரம் எடுக்காது.
இந்த அபாயநிலையை உணர்ந்தாவது கோயில்வாசலுக்கு வரும் எங்கள் பிள்ளைகளுக்கு பொங்கலுடன் சேர்த்து சைவத்தையும் ஊட்ட வேண்டிய கடப்பாடு எங்கள் அனைவருக்கும் உண்டு.
பாடசாலைகளில் சைவசமயம் ஒரு பாடமாக அமைந்த கல்வி முறையிலும், பிறந்த ஊரிலும் சுற்றுப் புற ஊர்களில் பத்து தொடக்கம் 25 நாட்கள் வரையில் நடக்கும் கோயில் திருவிழாக்கள் – பிரசங்கங்கள் – சொற்பொழிவுகள் எனக் கேட்டு வளர்ந்த எம்மவருக்கு இன்னும் சைவசமயத்தை பற்றி அறிவதற்கு எந்த தேவை இல்லாமல் இருக்கலாம். அல்லது அதனைப் பற்றி மேலும் அறிய நேரம் ஒதுக்ககாமல் இருக்கலாம்.
ஆனால் இங்கு – புலம் பெயர்ந்த நாடுகளில் பிறந்து வளர்ந்த எங்கள் பிள்ளைகள் எங்கள் பின்னால் கோயில்களுக்கு வரும் பொழுது அவர்களுக்கு வெறுமே நெற்றியில் விபூதியைம் சந்தனத்தையும் இட்டு கையில் சுண்டலும் மோதகமும் கொடுப்பதால் மட்டும் அவர்கள் சைவப்பிள்ளையாக வளர்ந்து விடப்போவதில்லை.
அதிகமான புலம் பெயர் நாடுகளில் இறைவன்மீது ஆன பக்தி ஆனது கடவுளிடம் பேரம் பேசும் ஒரு வடிவமாகவும் அதன் பிரதி வடிவமாக அவர் அவர்கள் செய்யும் பூஜைகளின் அளவுகளும் ஆடம்பரங்களும் போட்டிகளும் மலிந்து இருக்கின்ற தன்மை காணக்கூடியதாக இருக்கின்றது.
”வெள்ளை மலருமல்ல
வேறெந்த மாமலருமல்ல
உள்ளக் கமலமடி
உத்தமனார் வேண்டுவது” என்ற அடிப்படைத் தத்துவத்தினை ஆழமாக உணர்ந்து எங்கள் அடுத்த சந்ததிக்கு நாங்கள் எங்கள் சமயத்தை எடுத்துரைக்க வேண்டும்.
இதனை அனைத்து கோயில்கள், நிர்வாகசபைகள், பூசகர்கள் மிகவும் கவனத்தில் எடுக்க வேண்டும். அல்லாவிடின் இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட ” ஃபாஸ்ட்ஃபுட்” கோயில்கள் போல ஒரு ஃபாஸ்ட்ஃபுட் சைவசமயம் தோன்றுவதற்கு வாய்ப்பு உண்டு.
அதற்கு அத்திவாரம் போட்டவர்கள் நாம் ஆவோம்!
வி. ஜீவகுமாரன்

No comments:

Post a Comment